யாழ்ப்பாணம், அல்லைப்பிட்டி பகுதியில் இன்று அதிகாலை பொலிஸார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 17 வயதுடைய சிறுவன் ஒருவன் பரிதாபமாக உயிரிழந்துள்ளான்.
அல்லைப்பிட்டி பகுதியில் பொலிஸார் வீதி கடமையில் ஈடுபட்டிருந்த போது, ஒரு வாகனம் சந்தேகத்திற்கு இடமான முறையில் வேகமாக வந்துள்ளது. பொலிஸார் அந்த வாகனத்தை நிறுத்தச் சொல்லி சமிஞ்கை காட்டியும், அந்த கும்பல் எதனையும் பொருட்படுத்தாமல் மின்னல் வேகத்தில் வாகனத்தைச் செலுத்தியுள்ளது. இதனால் சுதாரித்துக்கொண்ட பொலிஸார், துப்பாக்கிச் சூட்டை நடத்தியுள்ளனர்.
பொலிஸார் நடத்திய இந்த அதிரடித் தாக்குதலில், வட்டுக்கோட்டை வடக்கு கற்பகப்பிள்ளையார் கோவிலுக்கு அருகாமையில் வசிக்கும் 17 வயதுடைய சிறுவன் ஒருவன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளான். இவனுடன் வந்த நல்லூர் மற்றும் வட்டுக்கோட்டை பகுதிகளைச் சேர்ந்த ஏனைய இருவரும் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்களிடம் ஊர்காவற்துறை பொலிஸார் தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

