பேருவளை பகுதியில் நீண்டகாலமாக திரைமறைவில் நடந்து வந்த ஒரு பாரிய சட்டவிரோத விவகாரம் தற்போது அம்பலமாகி ஒட்டுமொத்தப் பகுதியையுமே அதிர வைத்துள்ளது.
பேருவளையில் இரகசிய கருக்கலைப்பு நிலையம் ஒன்று இயங்கி வருவதாக பொலிஸாருக்கு தகவல் கிடைத்துள்ளது. சாதாரணமாகச் சென்றால் தந்திரமான அந்த மருத்துவரைப் பிடிக்க முடியாது என்பதால், பொலிஸார் ஒரு பக்கா ‘சினிமா பாணி’ திட்டத்தைத் தீட்டினர்.
இதற்காக விசேட பொலிஸ் குழு ஒன்று அமைக்கப்பட்டது. அந்தப் படைப்பிரிவைச் சேர்ந்த பெண் பொலிஸ் சிப்பாய் ஒருவர், ‘வாடிக்கையாளர்’ போல மாறுவேடத்தில் அந்த நிலையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டார். அவரும் மிகச் சரியாக நடித்து, அந்த மருத்துவரிடம் கருக்கலைப்பு செய்வதற்கு நேரத்தை (Appointment) பெற்றுள்ளார்.
கடந்த 8ஆம் திகதி, அந்தப் பெண் பொலிஸ் சிப்பாய் கருக்கலைப்புக்காகத் தயாராக இருந்த அந்த இக்கட்டான தருணத்தில், களுத்துறை நீதவான் நீதிமன்றத்தின் சோதனை ஆணையுடன் (Search Warrant) தயாராக இருந்த பொலிஸ் குழுவினர் மின்னல் வேகத்தில் அந்த இடத்திற்குள் புகுந்தனர்.
சிகிச்சைக்காகத் தயாராக இருந்த அந்த மருத்துவர், பொலிஸாரைக் கண்டதும் அப்படியே உறைந்து போயுள்ளார். தப்பிப்பதற்கு வழியே இல்லாத நிலையில் அவர் கையும் மெய்யுமாக கைது செய்யப்பட்டார். அங்கிருந்த சட்டவிரோத மருந்துகளையும் பொலிஸார் அதிரடியாகக் கைப்பற்றியுள்ளனர்.

