யாழ்ப்பாணம் திருநெல்வேலி பகுதியில் பட்டப்பகலில் அரங்கேறிய பயங்கர வாள்வெட்டுச் சம்பவம் ஒன்று அப்பகுதியையே ரத்த பூமியாக மாற்றியுள்ளது. போதைப்பொருள் மாபியாக்களின் மோதலின் உச்சகட்டமாக இளைஞர் ஒருவர் சல்லடையாக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருநெல்வேலி ஆடியபாதம் வீதியில் அமைந்துள்ள திருநெல்வேலி அரசடிஅம்மன் கோவிலுக்கு மிக அருகாமையில் உள்ள ‘அற்புதாஸ்’ கடைக்கு முன்பாகவே இந்த அதிர்ச்சி சம்பவம் அரங்கேறியுள்ளது.
யாழ். கொக்குவில் பல்கலைக்கழக புகையிரத பாதைக்கு அண்மையில் வசித்து வரும் ‘நைசன்’ என அழைக்கப்படும் நபர் மீதே இந்த வெறித்தனமான தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. போதைப்பொருள் கடத்தல் மற்றும் விநியோகம் தொடர்பான கோஷ்டிகளுக்கு இடையில் ஏற்பட்ட முறுகல் நிலையே இந்த சம்பவத்திற்கு முக்கிய காரணம் என கிசுகிசுக்கப்படுகிறது.
கண் இமைக்கும் நேரத்தில் நடந்த இந்த மோதலில், நைசன் துண்டு துண்டாக வெட்டப்பட்டுள்ளார். சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் அதிர்ச்சியில் உறைந்து போயுள்ளனர். வெறித்தனமாக தாக்கிய அந்த கும்பல், நைசனின் கை மற்றும் கால்களை துண்டாடியுள்ளது.
ரத்த வெள்ளத்தில் அரைகுறை உயிருடன் உயிருக்கு போராடிக்கொண்டிருந்த நைசன், உடனடியாக மீட்கப்பட்டு யாழ். போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார். அவரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
திருநெல்வேலி சந்தை மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகள் எப்போதும் சனநடமாட்டம் மிகுந்தவையாகும். இவ்வாறான இடத்தில், துணிகரமாக இறங்கிய இந்த வாள்வெட்டு கும்பல் யாழ். மண்ணில் மீண்டும் தலைதூக்கும் ‘ரவுடி’ கலாச்சாரத்தையும், போதைப்பொருள் ஆதிக்கத்தையும் வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளது.
சம்பவம் இடத்திற்கு விரைந்த கோப்பாய் பொலிஸார் விசாரணைகளை முடுக்கிவிட்டுள்ளனர். தாக்குதலை நடத்திவிட்டு தப்பியோடிய கும்பலை பொலிஸார் வலைவீசித் தேடி வருகின்றனர்.


